தமிழ்நாட்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களில் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவ மாணவிகள் 8ம் வகுப்பு படித்து முடிக்கும் வரையிலும், எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. அந்தவகையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.
வருகின்ற மே 18ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளி கல்வி துறை இணைய தளமான rte.tnschools.gov.in மூலம் பெற்றோர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கூட மாணவர்கள் சேர்க்கையை இலவசமாக பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் இல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெற்றோர் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் பள்ளியில் நிர்ணயித்த இடங்களை விட அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி மே 18ம் தேதி வரை நடக்கும். இதில் தேர்வு செய்யப்பட்ட மற்றும் நிராகரிக்கபப்ட்ட மாணவர்கள் விவரங்களை பள்ளிகள் மே 21ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்.

ஒரே பள்ளியில் சேர அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பித்து இருந்தால் மே மாதம் 23ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்ட விவரங்களை மே 29ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு தனியார் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم