பொதுத்தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 12 ஆம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதே போல 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதி வெளியாகிறது.
பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்றும், குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கான வினாக்கள் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத் திட்டத்தில் (Priority Syllabus – குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும். பாடத்திட்ட விவரங்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post