'வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும், விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தால் ஐந்து மதிப்பெண் கழிக்கப்படும்' என்று டி.என்.பி.எஸ்.சி.
தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; 'அரசு துறைகளில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணிகளில் 5529 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் வரும் 21-ம் தேதி முதல் நிலை தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வர்கள் தங்கள் விவரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விவரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றிக் கொள்ள வேண்டும்.

தேர்வர்கள், அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதி இருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.

மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை 'ஷேடிங்' செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.

வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும், விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தால் ஐந்து மதிப்பெண் கழிக்கப்படும்.

ரேகை வைக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் தவிர மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில் விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.

எந்த கேள்விக்காவது விடைக் குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும். தேர்வர்கள் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்' என அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post